மும்பையிலுள்ள சில பகுதிகளில் வாழுகிற ஏழைகள் போதிய அளவு உணவு பொருட்கள் கிடைக்காமல் மரணமடைகிறார்கள் . மும்பையில் சிவாஜிநகர் பகுதி ஏழை எளியவர்கள் வாழுகிற சுகாதாரமற்ற பகுதியாகும் . இந்தப் பகுதியில் 2010 ஆம் ஆண்டு , ஏப்ரல் மாதத்திலிருந்து 6வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காமல் உயிரிழந்து வருகிறார்கள் . இதற்கடுத்தது கோவிண்டி என்ற பகுதியில் அதிகமாக நடுத்தர வர்க்கத்தினர்கள் வாழுகிறார்கள் . இதே பகுதியில் ரஹேஜா கட்டுமான வல்லுனர்கள் நிறுவனம் , பெரிய பெரிய மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் , இடம் பெற்று இருக்கின்றன . மும்பை லோகல் டிரெயின் வேகத்தை குறைத்துக் கொண்டு சி எஸ்டி நிலயத்தில் இருந்து சிவாஜிநகர் பகுதியை கடந்து செல்லுகிறது .
கோணிப்பைகளால் மூடப்பட்ட ஒத்தை செங்கற்ச்சுவர்கள், பிளாஸ்டிக் பைகளால் மூடிய கூரைகளேன்று கண்ணுக்கெட்டிய தூரம்வரை எண்ணற்ற குடிசைகள் இந்தப் பகுதியில் இடம் பெற்று இருக்கின்றன . சிவாஜிநகர் பகுதி முழுவதும் சின்ன சின்ன கால்வாய்களாக சாக்கடைத் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது , அதன் நடுவே விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகள் . இரயில் சிவாஜிநகரை கடந்து செல்லும்போது அப்படியொரு துர்நாற்றம் , இந்தப்பகுதி மக்கள் அழுக்கோடு வாழுகிறார்கள் . வேறு மாநிலத்தில் இருந்து வருகிற ஏழைமக்கள் மும்பையிலுள்ள இந்தப் பகுதிக்குத்தான் முதன் முதலில் குடிபெயர்கிறார்கள். கொஞ்ச காலத்துக்கு சிவாஜிநகரில் தஞ்சமடைந்து விட்டு கைகளில் காசு கிடைத்தவுடன் வேறு இடத்துக்கு மாறிச் செல்லலாமென்கிற எண்ணத்தோடு இந்த இடத்துக்கு முதன்முதலில் வருகிறார்கள் . நாளாக நாளாக கிடைக்கிற வருமானம் கைக்கும் வாய்க்கும் பத்தாமல் குடிபெயர்ந்தவர்கள் அந்தப் பகுதியில் நிரந்தரமாக தங்கிவிடுகிறார்கள் . ஒரு சதுரங்கடி நிலம் லட்சரூபாய் மதிப்பைகொண்ட கொலாபாவிலும் இப்படிப்பட்ட சுகாதாரமற்ற குடிசைகள் நிறைந்த பகுதியை பார்க்க முடிகிறது . ஒரு பக்கம் அடுக்குமாடிக் கட்டிடங்கள், பெரிய மேம்பாலங்கள் , பணக்காரவர்க்கம் வாழுகிற கொலாபா பகுதியின் மற்றொரு பக்கத்தில் சுகாதாரமற்ற ஏழைமக்களின் குடிசை பகுதியும் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் பகுதிகளில் குடியிருக்கிற மக்களுக்கு உணவுப்பண்டங்கள் கிடைப்பதில்லை , அப்படியே கிடைத்தாலும் ஊட்டச் சத்துள்ள உணவுப்பொருட்கள் கிடைப்பதில்லை . மாதத்துக்கு 16 குழைந்தை களிருந்து 25 குழைந்தைகள் மரணமடைகிறார்கள் , குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் சரியான உணவு கிடைக்காமல் உயிர் இழைக்கிறார்கள் .
இந்தப் பகுதியிலுள்ள மக்களுக்கு மலிவான விலையில் ஊட்டச்சத்துள்ள உணவுப்பண்டங்கள் விநியோகம் செய்ய வேண்டுமென்று மாநில அரசு அறிக்கை கொடுத்தாலும் , அதனை நடைமுறைக்கு கொண்டு வருகிற அதிகாரிகளின் கவனக்குறைவால் அங்கு வாழும் மக்களுக்கு கிடைக்கப்பட வேண்டிய உணவுப்பண்டங்கள் கிடைக்காமல், அனைத்தும் விரயமாகி அழுகி விடுகிறது , ஏழைகளின் கைகளுக்கு எட்டவிடாமல் இடைத்தாரர்கள் புகுந்து உணவுப்பொருட்களை பறித்துச் செல்லுகிறார்கள் . அப்படியே விநியோகம் செய்தாலும் அந்த மக்களுக்கு ஊட்டச்சத்து இல்லாத உணவுபன்டங்கள் கொடுக்கப்படுகிறது . ஊட்டச்சத்து குறைவால் நோய்வாய்பட்ட குழைந்தைகள் , அதிலிருந்து மீண்டு எழுந்து வருவதற்கு சக்தியில்லாமல், படுக்கையில் புழுவைப்போல சுருண்டுகிடந்து உயிர் விடுகிறார்கள் . குச்சிபோல கைகளும் கால்களும், வீங்கிய தொப்பைகளும் கொண்ட குழந்தைகளை பார்க்கும்போது மனம் வலிக்கிறது , எலும்பும் தோலுமாக காட்சி தரும் பெண்மணிகள் , எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடக்கூடிய நிலையிலுள்ள ஆண்கள் என்று , மும்பையின் மறுபக்கத்தினுடைய பரிதாபமான செய்தியைக் கேட்டவர்களுடைய மனம் கனக்கிறது, ஏதோவொரு நெருடல் உறுத்திக் கொண்டிருக்கிறது . அரசாங்கம் பார்த்து ஒரு நல்லவழி செய்ய வேண்டுமென்று சொல்லிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது , முடிந்ததை செய்வதற்கு நாமும் முயற்சி எடுக்க வேண்டுமல்லவா ? இதுதான் ஒரு உண்மையான குடிமகனின் உண்மையான அக்கறை !!!